சபரிமலை ஐயப்பன் கோயிலில், தினசரி ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5,000 ஆயிரமாக குறைத்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில், நடை திறக்கப்பட்ட கடந்த 16ஆம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்பாட் புக்கிங் எனப்படும் உடனடி முன்பதிவில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகப்படியான பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கியதுதான், நெரிசலுக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தினசரி ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5,000 ஆயிரமாக குறைத்து உத்தரவிட்டது.
மேலும், எருமேலி பெருவழிப்பாதை, சத்திரம் புல்லுமேடு ஆகிய பாரம்பரிய கானகப் பாதைகள் வழியே தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரமாக குறைத்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், இந்த உத்தரவு வரும் திங்கட்கிழமை (நவ.24) வரை அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தனதுஉத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
