யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும்

என்றும், அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி என் செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர், இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், ஏ ஐ தொழில் நுட்பத்தின் பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதாக குற்றம் சாட்டினர்.
