தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னெடுக்கும் வித்தியாச அரசியல் கவனம் ஈர்த்து வருகிறது!

தமிழ்த் தேசிய வாக்காளர்களை ஒருங்கிணைப்பதுடன், குறிப்பிட்ட சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை முன்னிறுத்தி அவர்களின் வாக்குகளைக் கவரும் வியூகத்தில் களம் இறங்கியிருக்கும் சீமான், வயல், வனத்தைத் தொடர்ந்து கடலில் தடம் பதித்துள்ளார். முதல்கட்டமாக ஜூலை 10ஆம் தேதி மதுரையில், நாதகவின் உழவர் பாசறை சார்பில், ’மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற முழக்கத்துடன் ஆடு-மாடுகளின் மாநாட்டை நடத்தினார் சீமான். ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளையும் அரசியல் மேடைக்கு அருகே கொண்டுவந்து பேசிய சீமான் “கால்நடைகள் குடும்ப உறுப்பினர்கள் போன்றவை” என்றும், “13.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பால் வணிகத்தை நம்பியிருக்கும் தமிழகத்தில், மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது” என்றும் குற்றம்சாட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, வனத்துறையால் மேய்ச்சல் உரிமை மறுக்கப்படுவதைக் கண்டித்து, தேனி வனப்பகுதியில் ஆகஸ்ட் 3ஆம் தேதி, தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார். ஆயிரக்கணக்கான மாடுகளை சீமான் மலைக்கு ஓட்டிச் செல்ல, மேய்ச்சல்காரர்களுக்கும் வனத்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு சம்பவங்களும் நிகழ்ந்தன. இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூரில் ‘மரங்களின் மாநாடு’ நடத்தினார் சீமான். அப்போது பேசிய சீமான், ”நான் மரத்தை கட்டிப்பிடித்தபோது சிரித்தார்கள்” என்றும், ”வெள்ளைக்காரன் மரத்தை கட்டிப்பிடித்து படம் போட்டால் ரசிக்கிறார்கள்” எனவும் பேசினார்.

மாநாட்டுக்கு முன்பு மரங்களைக் கட்டிபிடித்து முத்தமிட்டு அவற்றுடன் சீமான் பேசியதை சமூக வலைதளங்களில் பலர் ட்ரோல் செய்ய, மரங்களுடன் பேசியதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளை கூறி, அவர்களுக்குப் பதிலடி கொடுத்தனர் நாம் தமிழர் கட்சியினர். அடுத்தகட்டமாக, நவம்பர் 15ஆம் தேதி தூத்துக்குடியில் ‘கடல் அம்மா மாநாடு’ நடத்த திட்டமிட்டுள்ளார் சீமான்.

கடலோடிகள் பிரச்னைகள் குறித்து பொதுவாக தமிழ்நாட்டு அரசியலில் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், முதல் முறையாக கடலுடன் மாநாடு எனக் கூறி கடல் சமூகத்தின் மீது கவனம் குவித்துள்ளார் சீமான். இதற்காக, திருச்செந்தூர் அருகே மீனவர்களுடன் படகில் சென்று கடலில் ஆய்வு மேற்கொண்டார். ’’கடலையும், கடல்வாழ் உயிரினங்களையும் அணு உலைகள், சாயக் கழிவுகள், ஆலைக் கழிவுகளில் இருந்து பாதுகாப்பதே இந்த மாநாட்டின் நோக்கம்’’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *