புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். நீதிமன்றம் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது. தண்டனை அறிவிக்கப்பட்டபோது, பன்னீர்செல்வம் தனது குற்றத்தை மறுத்து கதறி அழுதார்.


புதுக்கோட்டை மாவட்டம் எரிச்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (54) என்பவர், கடந்த ஆண்டு மாரியப்பன் கீரமங்கலம் அருகே மேற்பனை காட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய பெற்றோரிடம் சிறுமி நடந்ததை சொல்லி கதறி அழுதுள்ளார். இதையடுத்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பன்னீர் செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் புதுக்கோட்டை மகிளா நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பன்னீர்செல்வத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


பின்னர் காவல்துறையினர் பன்னீர்செல்வத்தை சிறைக்கு அழைத்துச் சென்ற போது, நான் குற்றம் செய்யவில்லை, குழந்தையை தொடக்கூட இல்லை, முழுவதும் பொய் வழக்கு என கண்ணீர் விட்டு கதறி அழுதது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *